Thursday 29 June 2017

நித்தமும் எங்கள் நெஞ்சுறைவாள்!


சூலமேந்து சுடர்தொடியாள் சூரனையே வதைத் தெழுந்தாள்
ஆலமுண்ட கண்டனையே ஆருயிராய் பாகம் கொண்டாள்
கோலமேனி தையலவள் காதலால் வந்த ணைப்பாள்
நீலமேனி வாலிழையாள் நித்தமும் எங்கள் நெஞ்சுறைவாள்
இனிதே,
தமிழரசி.

Tuesday 20 June 2017

அருகே நண்ணி அருள்வாயே!


வயலூர் உறையும் வடிவேலா
          வழக்கொன் றுண்டு வருவாயே
கயலூர் தடாகத் தாமரையாள்
          கனிந்தே வந்து பிறந்தாளே
மயலார் காதல் மயக்கமதில்
          மனதைத் தொடுத்தே நின்றாளே
அயலார் காணும் அரங்கதனில்
          அருகே நண்ணி அருள்வாயே!
இனிதே,
தமிழரசி.

Monday 19 June 2017

தென்னன் தமிழை பார்!

என் பேத்தி - மகிழினி

வண்ண மகளே வா
வடி வழகே வா
உண்ண உணவு பார்
உறங்கத் தொட்டில் பார்

கண்ணின் மணியே வா
காதல் மொழியே வா
கலைகள் பலவும் பார்
கருத்தில் இனிக்கும் பார்

மண்ணின் மலரே வா
மழலை ஞிமிரே வா 
மழையின் துளியை பார்
மரத்தின் தளிரை பார்

விண்ணின் மதியே வா
வெற்றித் திருவே வா
விண்ணின் ஒளியை பார்
விளையும் பயிரை பார்

தண்ணென் முகிலே வா
தாவி யணைக்க வா
தென்னன் தமிழை பார்
தெளிந்த சுவையை பார்

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஞிமிறு - தேனி

குறிப்பு:
என் பேத்தி மகிழினிக்கு பாடியது.
04/06/2017

Wednesday 14 June 2017

மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி!


காளமேகப் புலவர் ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவே கறி’ என்று கூறியிருக்கிறார். ஏன்? எதற்கு? அப்படிக் கூறினார் பார்ப்போமே?

காளமேகப் புலவரைப் பார்த்த வேறொரு புலவர் “மும்மூர்த்தி என்று சொல்கின்ற வேதன், அரன், மால் மூவரின் பெயர்களும் வர அவர்கள் சாப்பிடும் கறி, உண்ணும் உணவு, வைத்திருக்கும் ஆயுதம், அணியும் அணிகள், ஏறித்திரியும் ஊர்திகள், வாழும் இடங்கள் யாவும் வர ஒரு வெண்பா பாடச் சொல்லிக் கேட்டார்.
அதற்குக் காளமேகப் புலவரும் 
“சிறுவ நளைபயறு நெந்னெற் கடுகுபூ
மறிதிகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
- (காளமேகம் தனிப்பாடல்: 36)
என்ற வெண்பாவைப் பாடினார். அந்தப் புலவரும் காளமேகத்தின் வென்பாவைத் தனிச் சொற்களாகப் பிரித்து
“சிறுவன் அளை பயறு செந்நெல் கடுகுபூ
மறி திகிரி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெள்ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி”
என்று படித்தார். படித்தவர் திகைத்து ‘மும்மூர்த்திகளுக்கும் கற்றாழம் பூவா கறி!’ என்று கேட்டார்.

காளமேகப் புலவரும் சிரித்துக் கொண்டே ‘பிரமா பயற்றையும், சிவன் பிள்ளைக் கறியையும், திருமால் வெண்ணெயையும் கறியாக தின்றனர். மூவருக்கும் முறையே செந்நெல், நஞ்சு[ஆலகால விடம்], மண்  உணவாகும். தண்டம், மறி, சக்கரம் ஆயுதமாகும். பூணூல், புள்ளியுள்ள பாம்பு, கௌத்துவமணி அணியாகும். அன்னம், வெள்ளை ஏறு, கழுகு வாகனமாகும். தாமரைபூ, கைலைமலை, பாற்கடல் வாழும் இடமாகும்’ என்று சொன்னார். அதனைக் கேட்ட புலவரும் மகிழ்ச்சியடைந்தார். 

பிரமா[வேதன்] சிவன்[அரன்] திருமால்[மால்]
கறி பயறு பிள்ளை[சிறுவன்] வெண்ணெய்[அளை]
உணவு செந்நெல் நஞ்சு[கடு] பூமி[கு]
ஆயுதம் தண்டம்[தண்டு] மான்மறி[பூமறி] சக்கரம்[திகிரி]
அணி பூணூல்[நூல்] பாம்பு[பொறியரவம்] கௌத்துவமணி[மணி]
ஊர்தி அன்னம் வெள்ளைஏறு[வெற்றேறு] கழுகு[புள்]
வாழுமிடம் தமரைப்பூ[பூ] கைலைமலை[கல்] பாற்கடல்[தாழம்-தாழி]
இனிதே,
தமிழரசி.

Sunday 11 June 2017

உழைப்பே தலை!


ஒருவனைப் பார்த்து அவன் பெரிய உழைப்பாளி என்று பெருமையாகப் பேசுகிறோம். அதுபோல்  இன்னொருவனை ஒரு உழைப்பும் இல்லாமல் துன்பப்படுகிறான் என்றும் சொல்கிறோம். உழைப்பு என்றாலே துன்பப்படுதல் அல்லது வருந்துதல் என்ற கருத்தைத்தான் தரும். எந்த வேலையும் துன்பம் தரும் தானே.

அவன் பெரிய உழைப்பாளி என்னும் பொழுதும் அவன் பெரிதாகத் துன்பப்படுகிறான் என்றே சொல்கிறோம். அவன் படுந்துன்பம் அவனுக்குப் பொருளைப் பணத்தைத் தருகிறது. அதனால் அவனை மதிக்கிறோம். உழைப்பு இல்லாமல் இருப்பவன் உண்மையில் துன்பப்படவில்லை. பொருள் இல்லாமையே அவன் படுந்துயரமாகும். ஆதலால் துன்பப்படுவதே தலைசிறந்தது என்பது நம்மவர் கண்ட முடிவாகும். துன்பப்படுவதை பார்த்து மகிழ்வது வியப்பைத் தரவில்லையா? மனிதமனம் இத்தகைய ஒரு புதுமையான கலவையாக இருப்பது அற்புதமே! 

'உழைப்பு' என்னும் சொல் 'உழப்பு' என்னும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். தொல்காப்பியத்தில் உழப்பு என்ற சொல் இருக்கிறது. நாம் வெளிநாட்டிற்கு வந்து துன்பப்படுவது போல இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு பொருள் தேடிச்சென்றவன் தான் சென்ற நாட்டில் பட்ட துன்பத்தை மிகவும் விளக்கமாகக் கூறுவதை தொல்காப்பியர்
“சென்ற தேஎத்து உழப்பு நனிவிளக்கி”
                                                   - (தொல்: பொ:144: 51)
என்கிறார். ஆனால் தற்காலத் தமிழராகிய நாம் வெளிநாட்டில் பொருள் தேட எவ்வளவு உழைக்கிறோம்[துன்பப்படுகிறோம்] என்பதை நம் ஊர்களில் இருப்போருக்கு விளக்கிச் சொல்வதில்லை. அது அங்கே பலரை சோம்பி இருக்க வைக்கிறது.

தாயுமான சுவாமிகள் ‘என் உள்ளத்தை அறிவாய்! படுந்துன்பத்தை அறிவாய்! நான் ஏழை, தள்ளிவிடுவீராயின் தவித்துப்போவேன்’ என இறைவனிடம் கூறியதை
“உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான்ஏழை 
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே”
                                                    - (பராபரக் கண்ணி: 33)
என பராபரக் கண்ணி சொல்கிறது. இதில்  துன்பப்படுவதை அறிவாய் என்பதை உழப்பு அறிவாய் என்கிறார். 

பட்டினத்தார்  துன்பத்தால் வரும் உயர்வையும் துன்பப்படாது சோம்பி இருப்பதால் வரும் இழிவையும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுற வுளவோ”
துன்பப்பட்டு முயல்வதால் கிடைக்காத உறுதிப்பாடுகளும் இருக்கின்றனவா? சோம்பலால் [கழப்பு] கிடைக்காத துன்பங்களும் [கையுறவு] இருக்கின்றனவா? இல்லையே! எனவே உழப்பே தலை! உழைப்பே தலை!!
இனிதே,
தமிழரசி.

Saturday 10 June 2017

புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா!

Photo: Pungudutivu Today

புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா
பொற்கரந்தனைப் பிடித்தோம் அருளம்மா
தங்கைவருந்தி யுழைப் போரைப் பாரம்மா
தண்ணீர்க்கு வழியுமில்லை ஏனம்மா
செங்கயல் பாயும் செழுங்கழு நீரும்
செந்நெலும் பொலிந்திடச் செய்திடம்மா
நங்கையர் வாழ்வு நாளும் நலியுதம்மா
நம்மின முய்ய  நயந்திடம்மா
இனிதே,
தமிழரசி.

Friday 9 June 2017

பஞ்ச வண்ண அணிலே!


பஞ்சு போன்ற மயிரும் - நல்
பவள மூக்கு முடைய
பஞ்ச வண்ண அணிலே - உன்
பழமை என்ன சொல்வாயா

பஞ்சிக் கால் தன்னிலே - தீம்
பழம் பிடித்து உண்ணும்
பிஞ்சு விரலின் கீறல் - ஏன்
படுவ தில்லை சொல்வாயா

அஞ்சி ஓடும் போதும் - நின்
அழகு கொஞ்சம் கூடும்
எஞ்சி விட்ட பழத்தின் - ருசி
ஏறுவ தேன் சொல்வாயா

குஞ்சம் போல் வாலும் - கருங்
கண்ணு முள்ள அணிலே
கெஞ்சி மெல்ல கேட்கிறேன் - உன்
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
                                            - சிட்டு எழுதும் சீட்டு 141
இனிதே,
தமிழரசி.

Wednesday 7 June 2017

குறள் அமுது - (136)


குறள்:
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்                           - 1040

பொருள்:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லையென்று முடங்கி இருப்போரைக் கண்டால் நிலமகள் என்று சொல்லப்படும் நல்லவள் சிரிப்பாள்.

விளக்கம்:
இத்திருக்குறள் உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள பத்தாவது குறளாகும். மனிதர் உயிர்வாழ்வதற்கு வேண்டியவற்றை உழவுத் தொழிலால் பெறலாம் என்பதையும் எந்த ஒரு தொழில் இல்லாது போனாலும் உழவுத் தொழில் செய்து வளம் கொழிக்க வாழலாம் என்பதையும் நிலத்தின் ஏளனச் சிரிப்போடு திருவள்ளுவர் சொல்லும் பாங்கு நயக்கத் தக்கதாகும். 

உலகில் ஏழ்மையே இல்லாது அகல வேண்டுமெனில் நிலத்தை உழுது பயிரிட்டு வேளாமை செய்வதே சாலச்சிறந்ததாகும். மழை பொழிந்து நீரைத் தந்தாலும் நாம் நிலத்தில் இருந்தே நீரையும் உணவையும் பெறுகிறோம். மனிதன் உயிர்வாழ நீரும் உணவும் இன்றியமையாதவையாகும். 

உலக உயிர்களில் பதர் இல்லாத ஒரே ஓர் உயிரினம் மனித இனமாகும். அத்தகைய மனித இனத்திலும் நிலத்தை உழுது பயிரிடத் தேவையான வித்துக்களும் உழும் கலப்பையையும் கையில் இருக்கவும் சோர்வடைந்து ஏழ்மையில் வாடும் அறிவிலியும் பதரே என்பதை
“வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே”         - (நறுந்தொகை: 68)
என நறுந்தொகையில் பாண்டிய அரசனான அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளான். நறுந்தொகையை வெற்றிவேற்கை என்றும் அழைப்பர்.

நிலத்தை உழுது பண்படுத்தி வித்திட்டு மரம், செடி, கொடிகளை நட்டுப் பயிரிட்டு வளர்ப்பதால் நிலத்தின் வளம் செழிக்கிறது. மழை பொழிகிறது. உண்ணும் உணவுப் பொருட்களும், உடுக்கும் உடைகளுக்கான பருத்தி, பட்டுப்போன்றவையும், குடிக்கும் நீரும், சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்றும் எமக்குக் கிடைக்கின்றன. பாடுபட்டு பலன் அடைகிறோம். உடலோடு உள்ளமும் நலம் பெறுகிறது. அவற்றுக்கான விலையை என்றுமே நிலம் கேட்டதுண்டா?

அதனாலேயே திருவள்ளுவர் எம்மிடம் ஒன்றும் இல்லையே என்று கூறிக்கொண்டு அசையாது முடங்கி இருப்பாரைப் பார்த்து உலக உயிர்களையெல்லாம் தாங்கிப் பாதுகாக்கும் நல்லவளான நிலமகள் ‘மனிதராய் பிறந்து முடங்கிப் பதராய் கிடக்கின்றனரே’ என வாய்விட்டு தனக்குள் சிரிப்பாளாம் என்கிறார்.

Tuesday 6 June 2017

சங்ககால உணவு உண்போமா! - 3

முண்டகம் [கடல்முள்ளி]

தமிழகம் எங்கும் சங்ககாலத்தில் இயற்கைவளம் நிறைந்திருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆட்டுக்கிடாய் கட்டி வளர்த்த வயலில் விரால் மீன்கள் துள்ளிக் குதித்தன. அந்த ஆட்டுக்கிடாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை இட்டு உழக்கிய சேற்றில் உழாமலே விதைத்தனர். கரும்புப் பாத்தியில் நெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கின.
“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறுபொருத செறு உழாது வித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்”
                                                    - (பதிற்றுப்பத்து: 13: 1 - 3)
இப்படி இயற்கை வளம் நிறைந்திருந்தால் பலவையான உணவுப் பொருட்களும்  நிறைந்தே இருந்தன. கரும்பு ஆலைகளில் கரும்பை இட்டு சாறு எடுக்கும் அளவுக்கு கரும்புச் செய்கை மேன்மை அடைந்திருந்தது. 

மழை விளையாட்டாகப் பொழிய மூங்கில் வளரும் மலைத்தொடரில் கொலைவெறியுடைய யாளி தாக்க யானைக்கூட்டம் கதறுவது போல  கரும்பைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்திரங்களின் சத்தம் ஓயாது கேட்டது. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் [விசயம்]  உண்டாக்குவதால் ஆலைகளைப் புகை சூழ்ந்திருந்தது. அவ்வாலைகளில் கரும்புச் சாற்றை விரும்பியோர் வாங்கிக் குடித்தனர் என்பதை
“மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பலவுடன்
கணஞ்சால் வேழம் கதழ்வு உற்றாங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்”
                                                    - (பெரும்பாண்: 257 - 262)
என பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது. கரும்புச்சாற்றை நானிலமக்களும் விரும்பிக் குடித்தனர்.

கோடை காலத்தில் நெய்தல் நில மகளிர் என்ன செய்தார்கள் என்பதை மாங்குடி மருதனார் படம் பிடித்து புறநானூற்றில் காட்டியுள்ளார். வண்டு மொய்க்க விரிந்த மலர்கள் மணம் வீசும் கடற்சோலை உடைய நெய்தல் நிலம். கடல்முள்ளிப் பூவால் கட்டப்பட்ட மாலையும் வளையலும் அணிந்த மகளிர் பெரிய பனையின் நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், தென்னையின் [தாழை] சுவையான இளநீருடன் சேர்த்துக் கலந்த அந்த முந்நீரை உண்டு, கடலினுள் நின்ற புன்னைமரத்தில் ஏறி கடலில் [முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்த கடல் நீர்] பாய்ந்து நீந்தி விளையாடினர். 

“வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீ நீரொடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து”
                                                 - (புறம்: 24: 10 - 16)
சங்ககாலப் பெண்கள் மரத்தில் ஏறி கிளையிலிருந்து பாய்ந்து நீந்தி விளையாடியதை பல சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. பெண்கள் நீந்தினாலே கற்பு கரைந்து போய்விடும் என நினைப்போர் இக்காலத்திலும் வாழ்கின்றனர். அத்தகையோர் சங்ககாலப் பெண்களைப் பற்றி என்ன நினைப்பரோ!
முந்நீர்

சங்ககால மகளிர் கோடை வெயிற் தாகத்தைத் தீர்க்கக் குடித்த முந்நீரை நான் சுவைத்துக் குடித்திருக்கிறேன். உங்களுக்காக….

சங்ககால மகளிர் குடித்த முந்நீர்

தேவையான பொருட்கள்:
நுங்கு  -  1
இளநீர்  -  1
கரும்புச்சாறு  -  ½ கப்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்துள் வெட்டிய நுங்கின் நீரை விடவும்.
2. நுங்கின் கண்களின் மேலுள்ள தோலை அகற்றி சிறு துண்டுகளாக வெட்டி நுங்கின் நீருடன் சேர்க்கவும்.
3. அதனுடன் வெட்டிய இளநீரையும் விட்டு அதன் வழுக்கலையும் வெட்டிப் போடவும். [வழுக்கல் இருந்தால்]
4. இக்கலவைக்குள் கரும்புச்சாற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்க.
5. முந்நீரைக் குவளைகளில் விட்டுப்பரிமாறவும்.

குறிப்பு:
இளநீரின் சுவைக்கு எற்ப கரும்புச்சாற்றை கூட்டிக் குறைத்துக் கலந்து கொள்ளலாம். முந்நீர் குளிர்மையாக இருக்கும். ஆதலால் ஐஸ்கட்டி சேர்க்கத் தேவையில்லை.
இனிதே, 
தமிழரசி.

Monday 5 June 2017

குப்பை என்னும் வைரம்

வைரம் எடுப்போர் [Northwest Liberia]          - Stephen Haggerty

இயற்கையின் படைப்பே பலவகைப்பட்ட அற்புதங்களால் ஆனது. அவற்றுள் சிலவற்றை எம்மால் நம்பமுடியாது. ‘ஆ! அதுவா இது!’ என்று வியப்பின் எல்லைக்கே எம்மைக் கொண்டு செல்லும். வைரமும் அப்படியானதே! வேண்டத்தகாத பொருளாக அருவெறுத்து கழிவு, குப்பை, கூளம் என்றெல்லாம் கூறும் பொருட்களே வைரமாய் மின்னுகிறது. குப்பையே வைரம் என்றால் நம்புவீர்களா!  குப்பையே வைரம். அதுவே உண்மை. மேலேயுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது? எங்கிருந்து வைரம் எடுக்கிறார்கள்?

அதனால் இயற்கையின் படைப்பிலே குப்பை என்று கழித்து வைப்பதற்கு எதுவும் இல்லை. எனெனில் இயற்கையாக உருவானவை யாவும் ஒரு சுழற்சி முறையில் தோன்றியும் அழிந்தும் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. ஒன்று பிறிதொன்றாக நிலைமாறும் பொழுது சிலவேளையில் அதன் பெருமதியும் கூடும். இயற்கையில் இருந்து மனிதன் உண்டாக்கிய செயற்கைப் பொருட்கள் யாவும் இயற்கையுடன் மீண்டும் கலக்கும். 

மரத்தில் இருந்து மனிதன் உருவாக்கிய உரல், உலக்கை, கட்டில், வள்ளம், வீடு போன்றவையும், ஒலையில் இருந்து இழைத்த கிடுகு, பாய், உமல், கடகம், பெட்டி போன்றவையும், கல், மண், வெள்ளி, இரும்பு போன்றவற்றில் இருந்து செய்த யாவுமே உடைந்து அழிந்து போகும் போது மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். 

அளபெடைப் பெயர்ச்சொல் பற்றி தொல்காப்பியர்
“இயற்கைய ஆகும் செயற்கைய”
                                                  - (தொல்: சொல்: 125)
எனக் கூறியது மனிதன் உண்டாக்கும் செயற்கைப் பொருட்கள் இயற்கையுடன் கலக்கும் தன்மைக்கும் பொருந்துகிறது.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து கடந்த ஒன்றரை நூற்றாண்டு வரை இருந்த அந்தநிலை இன்று இல்லை. கி பி 1868க்குப் பின்னர் மண்ணின் வளமும் நீரின் வளமும் காற்றின் வளமும் மாசடைந்து காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதனால் அந்த நிலை உலகிற்கு ஏற்பட்டது என்பதை உலகும் உலகவல்லரசுகளும் நன்கு அறியும். எனினும் அவை இயற்கையின் பண்பைக் காதலிக்காது செயற்கையாம்  பணத்தைக் காதலிப்பதால் காலநிலை மாற்றங்களைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ கண் துடைப்புக்கு ஐ நா சபையில் ஒன்றுகூடி அறிக்கை விடுவார்கள். அவர்கள் தம்  எண்ணங்களைச் செயற்படுத்த முன் முப்பது வருடங்கள் ஓடி ஒரு தலைமுறை அழிந்திருக்கும். 

இயற்கையைக் காதலித்த அந்தத் தலைமுறை என்ன செய்தது  அவர்கட்கு முன் வாழ்ந்த தலைமுறையினர் என்ன செய்தனர் என்பதை அறியாது இளம் தலைமுறை தடுமாறும். உங்கள் முந்தையோர் செய்தவை எல்லாம் பிழை என மூளைகள் சலவை செய்யப்படும். அதற்கு முன்பு எம் இளைஞர்களே! கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இன்று பேசு பொருளாக எட்டிப் பார்க்கும் plastic rice, plastic eggs போன்ற பல பொருட்கள் நம் சந்ததியினரை காவு எடுக்க வரும். எனவே நாம் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிட்டு உண்பதே சாலச் சிறந்ததாகும். ஒவ்வொரு நாடும் வெளிநாடுகளை நம்பி உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாது பயிர்ச்செய்கைக்கு முதன்மை கொடுத்தால் இந்த இழிநிலையிலிருந்து மனிதகுலம் தப்பும்.

நான் மேலே சொன்ன மண்ணின் வளமும், நீரின் வளமும், காற்றின் வளமும் மாசடையக் காரணம் என்ன? கடந்த ஒன்றரை நூற்றாண்டாக செயற்கையாக இரசாயனப் பொருட்களைக் கொண்டு plastics - Celluloid[1868], Reyon[1900], Cellophane[1908], polyethylene[1933], Acrylic[1936], Nylon[1939] போன்ற பொருட்களை இந்தஇந்தக் காலங்களில் இருந்து உற்பத்தி செய்கின்றனர். இப்பொருட்கள் எதுவுமே தொல்காப்பியர் சொன்ன ‘இயற்கைய ஆகும் செயற்கைய’ என்னும் கூற்றுக்குப் பொருந்தாது. 

அவற்றில் சில மக்கி மண்ணோடு மண்ணாக குறைந்தது 450 வருடங்கள் எடுக்கும். ஒரு சில மண்ணோடு மண்ணாக 1000 வருடங்கள் செல்லும். அப்படி மண்ணோடு மண்ணாக மாறினாலும் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் நச்சுத் தன்மையை உண்டாக்கும். எமக்கு மட்டுமல்ல கடல்வாழ் உயிரினங்களில் இருந்து உலக உயிரினங்கள் யாவற்ருக்குமே இவை கேடு தரும். Plasticஐ நிலத்தில் போடாதீர்கள். அவை சூழலியலைப் பாதிக்கும்.

எனவே ‘PLASTIC’ என்பது உலக உயிர்கொல்லி. அது குப்பை அல்ல, என்பதை நம் சிந்தையில் செதுக்கி வைக்க வேண்டும். 

நம் முன்னோர்கள் குப்பை என்று எவற்றைச் சொன்னார்கள் தெரியுமா?
“பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தாறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர் செழிய!”
                                                       - (புறம்: 24: 21 - 23)
இப்பாடலில் புலவரான மாங்குடி மருதனார் ‘குப்பை’ என்று நெற்குவியலைக் குறிப்பிடுகிறார். 

பொருநராற்றுப்படை
“குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை”
                                                       - (பொருநராற்றுப்படை: 244)
எனத் தானியக் குவியலைக் குப்பை என்கின்றது. 

நற்றிணையோ
“…………………… சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கி”
                                                       - (நற்றிணை: 101: 2 - 3)
என இறால் குவியலாகக் காய்வதைப் பெண்கள் பார்த்ததைச் சொல்கிறது. 

திரிகடுகம்
“உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்”
                                                        - (திரிகடுகம்: 83: 1)
என உப்புக் குவியலைக் குப்பை என்கின்றது. எனவே நம் முன்னோர்கள் உணவுப் பொருட்களின் குவியலையே குப்பை என்றனர்.

நம்முன்னோர்கள் குப்பை என்று உணவுப்பொருட்களை அழைத்த உண்மை தெரியாமல் அவற்றை எல்லாம் குப்பை என வீசி எறிந்தோம். வெளிநாட்டாரின் உணவு மோகத்தில் மயங்கி அவர்களின் சொற்கேட்டு இன்று நீரழிவு என்றும் இரத்தக் கொதிப்பு என்றும் மாத்திரை மாத்திரையாகப் போட்டு நோயில் நுடங்குகிறோம். நீரழிவு நோய்க்கு அரிசி கூடாது என்று கூறி கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்கிறோம். உண்மையில் கோதுமையை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசியிலிருந்து கிடைக்கும் low glycemic திடீரென கூடும் சக்கரை உயர்வைத் தடுக்கும். 

அது போல் நம்முன்னோர் கரும்புச்சாற்றைக் குடித்து நோயற்று வாழ்ந்தார்கள். நாமோ கரும்புச்சாற்றை குப்பை என்று குடிக்காது தவிர்த்து சீனியை உண்டு நீரழிவால் துன்பப்படுகிறோம். கரும்புச்சாற்றில் இருக்கும் நீரழிவைத் தடுக்கும் இராசாயனப் பொருட்கள் உயர் வெப்பநிலையில் அதைக்காய்ச்சி சீனியாக்கும் பொழுது இல்லாமல் போகிறது. இக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்து மோர் குடிக்கக் கொடுப்பது போல சங்ககாலத்தில் கரும்புச்சாறு குடிக்கக் கொடுத்ததை சங்க இலக்கியம் காட்டுகிறது. 

குப்பை என்ற பெயருடைய குப்பை மேனி, குப்பைக் கீரை யாவுமே உடல் நலத்தைப் பேணுபவையாகும். குப்பைக் கீரையைத் தமிழர்கள் இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக உண்டு வருகின்றனர். புறநானூற்றில்
“குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து”
                                                    - (புறம்: 159: 9 - 10)
என வறுமையால் உப்பு இல்லாமல் குப்பைக்கீரையை உண்டதை பெருஞ்சித்திரனார் சொல்வதால் அறியலாம். மூட்டுவலிக்கு குப்பைக்கீரை சிறந்த மருந்தாகும்.

இன்று நாம் குப்பை என்று வெட்டி வீசும் சில தாவரங்கள் நம் முன்னோருக்கு நில மட்டத்திலிருந்து பல நூறு மீற்றருக்குக் கீழ் இருக்கும் வைரம், மாணிக்கம், பொன், வெள்ளி, செம்பு, போன்ற விலைமதிப்பற்ற பல பொருட்களைக் காட்டிக் கொடுத்தன. ஆனால் எமக்கு அவை பற்றிய மிகச்சிறிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கல்லும் மலையும் குதித்து பெரும் காடும் சுனையும் கடந்து ஓடிவரும் ஆறு. அப்படி ஓடிவரும் ஆறு கல், மண், மரம், செடி, கொடி, இறந்த உயிரினங்கள் யாவற்றையும் உருட்டிப் புரட்டி இழுத்துவரும். ஓடிவரும் இடத்தில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் ஆறு இழுத்துவரும் பொருட்கள் அந்த தடங்கலில் சிக்குண்டு தங்க, ஆற்று நீர் திசைமாறி வளைந்தோடும். இப்படித் தொடர்ந்து தங்கும் பொருட்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து உருவாவதே வண்டல் மண்ணாகும். ஆற்று நீர் இந்த வண்டல்களோடு கனிமங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். கனிமங்கள் ஒன்று சேர்ந்து கனிமப் படிவங்களை உண்டாக்கும். இவ்வாறு உண்டான வண்டல் படிவங்கள் காலப்போக்கில் படிவப் பாறைகளாக மாறும். 

எரிமலையின் போது கொதித்து ஓடும் பாறைக் குழம்பு [Magma] குளிர்ந்து பாறைகளாகின்றன. அப்போது வெப்பநிலைக்கு தக்கபடி ஒவ்வொரு கனிமங்களும் பாறைக் குழம்போடு தொழிற்பட்டு புதுக்கனிமங்களை உருவாக்கி பாறையோடு இறுகிப் பாறையாய் இருக்கும். தண்ணீர் மீண்டும் பாறையினுள் ஓடி கனிமங்களைக் கரைத்து இழுத்து வரும். அது வேறு இடங்களில் படிமங்களாகப் படியும். இச்செயற்பாடு இயற்கையின் சுழற்சியாய் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இதன் போது உருவாவதே வைரம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி போன்றவை. இன்னொரு வகையில் சொல்வதானால் நீர் அள்ளிவந்த குப்பைகளையே இயற்கை காலவேட்டத்தில் வைரம், பொன் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களாக மாற்றுகிறது. அதனால் குப்பையே வைரமாகிறது.

புல்லுருவி

இயற்கையாக எங்கே குதிரைவாலி, புல்லுருவி போன்றவை வளருமோ அந்த நிலத்தின் அடியிலே பொன், வெள்ளி போன்ற கனிமங்கள் கிடைக்கும் என்பதை பண்டைத்தமிழர் அறிந்திருந்தனர். அவை வளரும் மண்ணின் நிறத்தையும் தன்மையையும் கொண்டு எப்பொருள் கிடைக்கும் என்பதையும் அறிந்திருந்தனர். குதிரைவாலி என்பது தினை, வரகு, குரக்கன் போன்ற ஒரு தானியமாகும். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் வாழ்ந்தோர் குதிரைவாலியை சுவைத்து உண்டனர். நாம் குதிரைவாலியை குப்பை என ஒதுக்கிவிட்டோம். அது நீரழிவு நோய் உள்ளோருக்கும், மலச்சிக்கல் உடையோருக்கும் மிகநல்ல உணவாகும்.
குடியோட்டி - பொன்னுமுட்டை

நாம் அன்றாடம் குப்பை என்று வெட்டி வீசும் ஓர் அற்புதமான மூலிகைச் செடி குடியோட்டிச் செடியாகும். அதனை பொன்னுமுட்டைச் செடி என்றும் வைத்திய வாகடங்கள் சொல்கின்றன. அதன் பூ பொன் முட்டை போல இருப்பதால் பொன்னுமுட்டை என அழைத்தனர் போலும். இச்செடி காடுபோல மண்டி இயற்கையில் வளர்ந்திருக்கும் நிலத்தின் கீழே செம்பு இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தனர். குடியோட்டிச் செடியின் விதைகள் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும். பல்வலிக்கு அதன் விதைகளை காய்ந்த இலையில் வைத்துச் சுற்றி சுருட்டுப்போல் குடிக்கக் கொடுப்பர். மயக்க மருந்தாகவும் அவ்விதைகள் பயன்படுத்தப்பட்டன. கண்டசர்க்கரையுடன் குடியோட்டிப் பூவைச் சேர்த்துக் காய்ச்சி இருமலுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். 
ரம்ப

நாம் கறிக்கு வாசனைக்காகப் போடும் ரம்பயும் ஒரு கனிமக் காட்டியே. நீரும் கருமையான மண்ணும் கலந்த சேற்றுநிலத்தில் இயற்கையாக ரம்பச் செடிகள் செழித்து வளர்ந்து இருக்குமாயின்  அவ்விடத்தின் கீழே வைரம் இருக்கும் என்பதையும் ஆராய்ந்து கண்டிருந்தனர். அத்துடன் அங்கிருக்கும் சேற்றில் இருந்து மூக்கை அரிக்கும் ஒருவித மணமும் வரவேண்டும். 

இயற்கையோடு இசைந்து வாழ்ந்த நம் முன்னோரின் பல அரிய நல்ல கண்டுபிடிப்புகளை நாம் குப்பை எனப்புறக்கணித்து உண்ண நல்ல உணவில்லாமல் செயற்கை உணவுகளை உண்டு வாழும் நிலை வருவதை எண்ணிச் சிரிப்போமா! அழுவோமா!
இனிதே,
தமிழரசி.

Saturday 3 June 2017

ஊமையாக்கும் காதல்


காதலே உலக உயிர்கள் யாவும் ஒன்றோடு ஒன்று அன்புகாட்டவும் இரக்கப்படவும் துணைபுரிகிறது. அதனாலேயே பாரதியாரும் ‘காதல் இல்லையேல் சாதல் சாதல்’ என்று உரக்கக் குரல் கொடுத்தர். அந்தக் காதலே இனக்கவர்ச்சியையும் தூண்டுறது. அந்தத் தூண்டுதலால் எழும் காதலை பலரும் அறியச் சொல்வோர் சிலரே. அதனால் காதல் வயப்பட்டோர் ஊமையர் போல தமது காதலைச் சொல்லமுடியாது இருக்கின்றனர்.

சங்க காலத்தில் ஓர் இளம் நங்கையைக் காதலித்த காதலன் ஒருவன் கல்விக்காகவோ போருக்காகவோ பொருள் தேடியோ இன்னொரு நாட்டிற்கு சென்றுவிட்டான். அவர்களின் காதலை அவளின் தோழி மட்டுமே அறிவாள். காதலன் பிரிந்து சென்ற நாளில் இருந்து காதலி படுந்துயரைப் பார்த்து பெருந்துயர் கொண்டாள் தோழி. தனது காதலுக்காகத் தோழி அடைந்த வருத்தத்தைக் கண்ட காதலி
“கவலை யாத்த அவல நீள்இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால்ஆன் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே”
                                                      - (குறுந்தொகை: 224)
யாமரங்கள் செறிந்த துன்பந்தரும் பாலை வழியிடையே சென்றவரின் கொடுமையை உயர்வாக எண்ணித் தூங்காது இருக்கும் வருத்தத்திலும் பார்க்க வருத்தம் உண்டாகிறதே! இரவு நேரம் கிணற்றினுள் விழுந்த குரால் நிறப்பசுவைக் கண்ட ஊமையன் அதனைப் பிறருக்கு எடுத்துச் சொல்லமுடியாதிருப்பது போல நான் படுந்துன்பத்தைப் பார்த்து என் காதலைப் பிறருக்குச் சொல்லமுடியாது கலங்கும் தோழியின் வருத்தத்தால் ஏற்படுந் துயரை என்னால் பொறுக்க முடியவில்லையே!

காதலி தன் காதலை மற்றோருக்குச் சொல்லமுடியாது ஊமையானாள். இவளது காதலை எவருக்கும் எடுத்துச் சொல்லமுடியாது தோழியும் ஊமையானாள். ஒரு ஊமை படும் துயரைப்பார்த்து இன்னொரு ஊமை வருந்தமுடியுமே அல்லாமல் சொல்லித் தேற்ற முடியுமா? முடியாது. காதல் இருவரையும் ஊமையாக்கியதால் ஒருவரைப் பார்த்து ஒருவர் வருந்துகின்றார்.
இனிதே,
தமிழரசி.

Friday 2 June 2017

சித்திரக் கவிதை - 5

தேனை தேடு மைந்தனை! காத்திடு!!
வண்டிற்சில் சித்திரக் கவிதை
[எட்டாரை வட்டம்]

முருகா தொடர்ந்தே தீமையெலாம் மறவாமே
உருகா மனத்தேனை தீந்தமிழ் அகமுற
பருகிடத் தந்தே தீதல்லால் நன்றாய்
அருள் புரிந்திடு தீனையெண்ணி மயங்கா
முருகாம் உணர்வை பரிந்து அளித்து
மேன்மையுற முறைசெய் தெனையே காத்திடு!

இச்சித்திரக் கவிதை எட்டு ஆரை வட்டச் சித்திரக்கவிதை என்று சொல்லப்படும். இதனை வண்டிற்சில் சித்திரக்கவிதை என்றும் கூறுவர். ஒரு வட்டத்தை ஒத்த கோணமுடைய எட்டு ஆரைகளுடையதாகப் பிரித்து [வண்டிற்சில்லின்] ஒவ்வொரு ஆரைக்கும் ஆறு எழுத்துக்களாய் ‘தீ’ என்னும் எழுத்து அச்சாணியாக நிற்க குறட்டில் [அச்சாணியை சுற்றியுள்ள வட்டத்தில்] ஆரைக்கு ஓர் எழுத்தாக ‘தேனை தேடு மைந்தனை’ எனும் எட்டெழுத்துத் தொடர் வர, சூட்டில் [வெளிவட்டத்தில்] முப்பத்திரண்டு எழுத்துக்கள் நின்று எட்டாரை வட்டச் சித்திரக் கவிதையாகிறது.

சித்திரத்துக்குள் மறைந்திருக்கும் சித்திரக் கவிதையைப் பார்ப்பது எப்படி?
சூட்டின் [வெளிவட்டத்தின்] இடப்பக்க நடு ஆரையிலிருந்து நேரே வலப்பக்க ஆரையையும் சேர்த்து முதலடியைப் பார்த்து, வலஞ்சுழியாக 2ம், 3ம், 4ம் ஆரைக்குச் சென்று இரண்டாம், மூன்றாம், நான்காம் அடிகளையும் பார்வையிட்டு முதலடி ஆரம்பிக்கும் ‘மு’ எனும் எழுத்திலிருந்து வலமாக சூட்டைச் [வெளிவட்டத்தைச்] சுற்றி  வர 5ம், 6ம் அடிகளைப் பார்க்கலாம். குறட்டில் இருக்கும் ‘தேனை தேடு மைந்தனை’  முடியும் ஆரையின் தொடக்கச் சூட்டில்[வெளிவட்டத்தில்] ‘காத்திடு’ என இருப்பதையும் சேர்த்துப் பார்க்கவும். 

ஐம்புலச் சுவைத்தேனை 'தேடுகின்ற மைந்தனை காத்திடு' என்ற கருத்தில் எழுதியதாகும். ‘தேனை தேடு மைந்தனை’ என குறட்டில் வந்தது போல் நாம் விரும்பும் ஒரு செய்தி குறட்டில் [அச்சாணியைச் சுற்றியுள்ள வட்டத்தில்] வர எழுதுவது இச்சித்திரக் கவிதையின் சிறப்பாகும்.
இனிதே,
தமிழரசி.

Thursday 1 June 2017

குளம் தொட்டு வளம் பெருக்குவோம்.

பண்டைய நெற்கந்துக் குளம் - உங்கள் பார்வைக்கு
[நண்பகல் வெய்யிலைப் பொருட்படுத்தாது  vedio எடுத்தனுப்பிய உள்ளத்துக்கு என் வாழ்த்து]

இன்றைய சூழ்நிலையில் புங்குடுதீவு வளம் பெறத் தேவையானது குளங்களே. நம் முன்னோர்கள் குளங்களின் தேவையை நன்கு உணர்ந்திருந்தனர். அதனாலேயே கிட்டத்தட்ட பதினெட்டு சதுரமைல் பரப்புள்ள தீவுக்குள் வெட்டுக்குளம், பெரியகிராய், திகழிக்குளம் என பத்துப் பனிரெண்டு குளங்களையும், மக்கிக்குண்டு, தர்மக்குண்டு என சில குண்டுகளையும் எம் முன்னோர் எமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் எமக்காக விட்டுச்சென்ற பண்டைய ஆறு, குளங்களில் ஒரு சிலவற்றின் பெயர்களை எப்படித் திரித்துவிட்டோம் தெரியுமா? திரித்து, மாற்றிப் பேசியும் எழுதியும் வருவது பெரிய வரலாற்றுச் சிதைவை உண்டாக்கும். அதனால் நம் இளஞ்சந்ததியினர் புங்குடுதீவின் பண்டைய வரலாற்றை ஆராய்ந்து அறியமுடியாது செய்கிறோம். அதனை புலம் பெயர்ந்து வாழும் நம் உறவுகள் உளங்கொளல் நன்று. கள்ளியாற்றைக் களியாறு என்கிறார்கள். களியாறு என்று போடாதீர்கள் என்று சொன்னால் ‘கள்ளியாக இருந்தால் என்ன? களியாக இருந்தால் என்ன?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் போய்ப் பார்த்த போது கள்ளியாறு களியாக இருந்ததாம். என் செய்வது? யாரை நோவது!

புங்குடுதீவில் என் தந்தையின் அப்புவுக்கு நெற்காணிகள் இருந்தன. அந்தக் காணிகளில் சில ஆம்பற்குளத்தருகேயும் இருந்தன. அந்த வயற்காணியில் ஒன்று எனது தந்தையின் தங்கைக்கு [இரத்தினமாமி] சீர்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதனை மாமி ஆம்பற்குள வயல் என்றே கூறுவார். ஆனால் இன்றோ அதனை ‘ஆமைக்குளம்’ என்று சொல்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள புங்குடுதீவுப் பகுதியிலும் அக்குளத்தை ஆமைக்குளம் என எழுதியிருப்பது வேதனை அளிக்கிறது. 

இயற்கையாகவே எங்கள் புங்குடுதீவில் நெய்தல் நிலமும் மருத நிலமும் கலந்தே இருக்கிறது. அதனாலேயே  அங்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வயல்களுக்கு இடையே ஆம்பற்குளம் இருக்கிறது என்பது வரலாற்றுச் சிறப்பாகும். அதன் பெயரைச் சிதைக்கலாமா! நமக்கிருந்த வளத்தை நாமே குழிதோண்டிப் புதைப்பதா! 

குறுந்தொகை
“அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
ஆம்பல்” 
                                     - (குறுந்தொகை: 178: 1- 3)
என மருத நிலத்தில்[பழனம்] மலர்ந்த ஆம்பலைச் சொல்கிறது. 
அரக்காம்பல்

சேர அரசனது [கோக்கோதை] நாட்டு மருதநில வயல்களில் ஆம்பல் பூக்க பறவைகள் ஆரவாரம் செய்ததை
“அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய்நெகிழ
வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு”
                                            - (முத்தொள்ளாயிரம்)
முத்தொள்ளாயிரம் கூறுகிறது. அரக்காம்பலின் இலை, தண்டு யாவும் செம்மை கலந்ததாய் தெரியும். ஆம்பற்குளத்தில் ஆமைகள் இருப்பினும் நன்னீர் வளத்தோடு பல்லுயிரும் வாழ எழிழோடு இருக்கும். ஆனால் ஆமைக்குளமோ சேற்று மணத்துடன் இருக்கும். ஆமைக்குளத்திலிருந்து வயல்களுக்கு நீர்ப் பாய்ச்சமுடியாது. பண்டைய பெயர்களை சிதையாது பாதுகாப்பதும் புங்குடுதீவுக்கு வளம் சேர்ப்பதேயாகும்.

இன்னொரு குளத்தின் பெயரை ‘நக்கந்தைக் குளம்’ என்கிறோம். அது வல்லனில் இருக்கிறது. ‘நக்கந்தை’ என்னும் அதன் பெயரே நெற்செய்கையில் அக்குளத்திற்கு இருந்த முதன்மையைக் காட்டுகிறது. நெல் + கந்து = நெற்கந்து. நெற்கந்து என்பது பேச்சு வழக்கில் நற்கந்தையாகி நக்கந்தையாக மருவியுள்ளது. நெற்கதிர்களை  அடிக்கும் பொழுது நெல்லைத் தவிர்த்து வரும் சாவி நெல், வைக்கோல், தூசு முதலானவற்றைக் கந்து என்பர். வல்லன் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை சூடுமிதிக்கும் போது அதன் கந்துக்கள் காற்றில் பறந்து சென்று இக்குளத்தில் வீழ்ந்து பாசிபோல் படர்ந்திருந்ததால் நெற்கந்துக் குளம் என்றனர். அதனாலேயே முத்துக்குமாருப் புலவராலும்
“கன்னலொடு செந்நெல்விளை பொங்கைநகர்
தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே”
எனப் பாடமுடிந்தது. நன்னீர் வளம் இல்லாத இடத்தில் கரும்பும் நெல்லும் விளையுமா? என்பதை எண்ணிப்பார்த்தல் நன்றல்லவா!

முதலில் கேணி, குளம், பொய்கை, தடாகம், குட்டம், குண்டு, ஓடை போன்ற சொற்களின் வேறுபாட்டை புரிந்து கொள்ளவேண்டும். கோயிலில் உள்ள கேணிகள் எல்லாம் குளங்கள் ஆகாது. குளங்களுக்கும் கேணிகளுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை வயல்களுக்குப் பாய்ச்சுவதற்கான தூம்பு, கலிங்கு[மதகு], வாய்க்கால் போன்றவை உள்ளதாக பெரும்பாலான குளங்கள் இருக்கும். அவை இல்லாத சிறுகுளங்களில் தேவையானபோது வாய்க்கால் வெட்டி மண்மூட்டைகளைப் போட்டு மறித்து நீரைப் பெற்றுக் கொள்வர்.

நீர்ப்பாசன வசதியுள்ள குளங்களை அமைப்போர் சுவர்க்கத்திற்கு செல்வர் என்று சிறுபஞ்சமூலம் எனும் நூலில் காரியாசான் எனும் புலவர் கூறுகிறார்.
"குளந்தொட்டு கோடு பதித்து வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி - வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ் வைம்பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது”
1. குளத்தை வெட்டி, 2. கலிங்கு[கோடு] பதித்து, 3. நீர் ஓடும் வழிகளை - ஆறு/ வாய்க்கால் [குளத்துக்கு நீர் வரும் வரத்துக்காலையும் வயல்களுக்கு நீர் போகும் போக்குக் கால்களையும்] உண்டாக்கி, 4. வரம்பு இட்டு எருப்போட்டு, உழுது வயல்களாக்கி, 5. பொதுக் கிணறுகளையும் உருவாக்குவோர் சுவர்க்கத்துக்குப் போவார்களாம்.

புங்குடுதீவில் கோயில் கோயிலாகக் கட்டி சுவர்க்கம் செல்ல வழிதேடுவோர் காரியாசான் சொல்வதைச் செய்யலாமே. பெரும்பாலான கோயில்கள் பூசை செய்வாரின்றி மூடிக்கிடக்கின்றன. அக்கோயில்களால் ஒருசில குடும்பங்களே வாழும். புங்குடுதீவில் குளங்களை உருவாக்கி பயிர் செய்ய வழி செய்தாலோ நன்னீரும், மரஞ்செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என உயிர்கள் அனைத்தும் பயனடையும். இவற்றுக்கும் மேலாக மழைபொழிய  நல்ல காற்றும் நிழலுமாக வளங்கொழிக்குமே. வேண்டுமானால் அறுவடைகாலத்தில் சென்று கோயில் திருவிழா போல் பெருவிழா எடுங்களேன். விழா எடுப்பதற்கு என்றே அம்பலவாணர் அரங்கையும் கட்டியிருக்கிறார்கள். பயன் பெறலாமே. 

புங்குடுதீவு சைவப்பெருமக்களுக்கு இன்னொன்றையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். திருவிளையாடற்புராணம் படித்தவர்களுக்கு அல்லது திருவிளையாடற் படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்லப்போவது நன்கு தெரிந்திருக்கும். நாம் வணங்கும் சிவனாரும் வைகை அணையைக் கட்டுவதற்கு கூலியாளாக பிட்டுக்கு மண்சுமந்து வரகுணபாண்டியனிடம் பிரம்படிபட்டு உயிர்களை வாழவைக்கும் நீரின் முதன்மையைக் காட்டினாரே. சிவனார் மதுரைக் கோயிலையும் கோயிற்பூசைகளையும் பூசாரிகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஏன் அணைகட்டச் சென்றார். அவர் எமக்கு வழிகாட்டித் தந்தும் நாம் கோயில்களைமட்டும் கட்டிக்காப்பது சரியா? என புலம் பெயர்ந்து வாழும் படித்த அறிவுள்ள என் உறவுகளைக் கேட்கிறேன். புங்குடுதீவில் வட்டாரத்துக்கு ஒன்றாக பன்னிரெண்டு குளங்களைக் கட்டினால் என்ன? 

புங்குடுதீவில் வாழ்ந்த நம் மூதாதையர் 
“இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித்து”
                                           - (சிலம்பு:11 : 26 - 28)
என இளங்கோவடிகள் சொன்னது போல மழைநீரைக் குளங்களிலும் குண்டுகளிலும் பிடித்து[பிணித்து] வைத்திருந்தனர்.

குளங்களை எப்படி? எந்த வடிவத்தில் அமைக்கவேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஈழத்தில் உள்ள குளங்கள் பெரும்பாலும் தாமரை மொட்டின் வடிவில் இருக்கும், அதாவது தாமரைத் தண்டு போல ஆறு ஓடிவந்து தாமரை மொட்டுப்போன்ற குளத்தினுள் விழும். நான்மணிக்கடிகையும் ஆற்றுவெள்ளம் உள்ளடங்கக் கூடிய குளங்கள் இருந்ததை
“யாறு உள் அடங்குங் குளமுள”
                                         - (நான்.கடிகை: 54: 1)
எனச் சொல்வதும் தாமரை மொட்டுப் போன்ற குள அமைப்பை உறுதி செய்கிறது. குளத்தின் வடிவம் வட்டமாக இல்லாது தாமரை மொட்டு வடிவில் இருப்பதால் என்ன நன்மை அடைந்தனர். வேறு எந்த வடிவில் குளத்தை அமைத்துப் பொருட்செலவைக் குறைத்தனர். எப்படி குளம் அமைப்பதற்கான நிலத்தைத் தேர்ந்து எடுத்தனர். குளத்தின் அணையிலிருந்து நீர்கசிந்து வெளியே போகாமலும் உடைப்பு எடுக்காதும் மண்ணால் எப்படிக் கட்டினர் என்பதையும் நான் வெளியிட இருக்கும் நூலில் பார்க்கவும். 
குட்டை

புங்குதீவில் வாழ் இளைஞர்கட்கு ஒரு சிறு வேண்டுகோள். நீங்கள் வசிக்கும் வட்டாரங்களில் குளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மழைபொழியும் போது மழைநீர் எத்திசையில் இருந்து எத்திசைக்கு ஓடுகிறது?  ஓடையாக ஓடும் நீர் தேங்குகிறதா? தேங்கும் இடம் எது? அதுவே குட்டையாக மாறுகிறதா? அல்லது வேறு இடத்துக்கு வழிந்தோடுகிறதா? எதுவரை செல்கிறது?  என்பவற்றைப்   பார்த்துக் குறித்து வையுங்கள். நம்மூரைப் பசுமையாக்கத் தேவையான குளங்களை அமைக்க அது உதவும். எப்படி? என்ன செய்வது? என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

மனிதன் காட்டில் அலைந்த காலத்திலேயே பெண்கள் பயிர் வளர்க்கத் தொடங்கினார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துச் சொல்கிறது. அதனால் பண்டைத் தமிழர் பெண்களுக்கு கூடுதலான அறிவையும் பொறுப்பையும் கொடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ‘கணக்கதிகாரம்’ என்னும் நூலிலுள்ள ‘நீர்வழிச் சூத்திரம்” எனும்
“ஒரு நாளின் நாழிகையை ஒல்லா மனத்தின்
உரு நாழிகைக்கு ஈந்து மானே - தரும்இலக்கம்ச்
சேர்ந்ததற்கு வேறான இந்நாழிகைக்கு ஈந்து
பார்த்ததினம் பேரே பகர்
இப்பாடலைச் சொல்லலாம். 

இச்சூத்திரத்திலிருந்து
குளம் என்ன கொள்ளளவு உடையது?
எத்தனை மடைகளால் தண்ணீர் பாய்கிறது?
இவ்வளவு பரப்பளவுக்கு எவ்வளவு காலத்தில்  நீர்ப்பாசனம் செய்யலாம்?
எவ்வளவு தண்ணீர் மடைகளிலிருந்து வெளிவரும் ?
எல்லா மதகுகளும் திறக்கப்பட்டால் எவ்வளவு தண்ணீர் வெளியேறும்? என்பனவற்றைக் கண்டறியலாம்.

காரிநாயனார் ஏன் மானே! என விளித்து, பெண்ணுக்கு குளத்தைப்பற்றிய இவ்வளவு விடயங்களையும் கண்டறியத் தேவையான சூத்திரத்தைச் சொன்னார்? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். நம்முன்னோர் பெண்களாகிய எமக்குக் கொடுத்துச்சென்ற பொறுப்பினை மதித்து வாழ்ந்தால் புங்குடுதீவு என்ன இவ்வுலகமே உணவில் தன்னிறைவு பெறும். 

நான் என் சிறுவயதில் தந்தையுடன் சேர்ந்து வன்னியில் பல இடங்களில் சிரமதானம் செய்திருக்கிறேன். அந்நாளில் என்னை அறிந்தவர்களுக்கு அது தெரியும். வினோபாஜியே சிரமதானத்திற்கு முதல் வித்திட்டவர். எங்கள் சிரமங்களைப் புறக்கணித்து ஒன்றாகக் கைகோர்த்து ஒன்றைச் செய்து முடிக்க நேரம் மட்டுமே தேவை. அரசாங்கமோ அதிக பணமோ தேவையில்லை. அரசாங்கத்துக்கும் உலகிற்கும் நாமே முன்னோடியாக விளங்கலாம். புங்குடுதீவு வளம் பெற நன்னீர் வேண்டும். நன்னீர் தேங்க குளங்கள் வேண்டும். குளந்தொட்டு [குளத்தைத் தோண்டி] புங்குடுதீவின் வளம் பெருக்குவோம்.
இனிதே,
தமிழரசி.